''இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை.." : ட்ரம்ப் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு



வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் திகதி அமுலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27ஆம் திகதி அமுலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது” என்று தெரிவித்தார்.

 
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஸ்மார்ட்போன், கணினி, மருந்துகள், சில வகை உலோகங்கள், கனிமங்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஆடை, தங்க ஆபரணங்கள், வைரங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது..

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் தாமு ரவி கூறியபோது,

‘‘அமெரிக்காவின் வரி விதிப்பு என்பது தற்காலிக பிரச்சினைதான். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடுகளுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, ‘அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து இந்திய மதிப்பில் 31,500 கோடி ரூபா மதிப்பில் பி-81 ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்த நிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என ரொய்ட்டர்ஸ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.

இதேநேரம் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வொஷிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் நிறுவன செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘இந்த செய்திகள் தவறானவை. அமெரிக்காவுடன் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன’ என்று தெரிவித்துள்ளன.